அதிர்ஷ்டம் தரும் திடீர் வாய்ப்பு
இன்று அதிர்ஷ்டம் தரும் ஒரு திடீர் வாய்ப்பு பற்றி பேச விரும்புகிறேன். மக்கள் பொதுவாக மூன்று வகையான நோய்கள் குறித்து அச்சப்படுகிறார்கள். இதயநோய், புற்றுநோய் மற்றும் பக்கவாதம். ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்படும்போது அவர் பிழைப்பாரா என்று சொல்ல முடியாது. மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை அல்லது வேறு ஏதோ என்றால் அவர் பிழைத்தாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சிறிது காலமே உயிர் வாழக்கூடும். ஆனால், மாரடைப்பு எப்படி வந்தது என்பது போன்றவற்றை அவரால் தன்னுடைய நண்பர்களுக்குச் சொல்ல முடியும்.
புற்றுநோய் வந்து உடலெங்கும் பரவினால் மரணம் நிச்சயம். எனவே மக்கள் இந்த நோய்களைக் கண்டு அச்சப்படுகிறார்கள். இன்னொரு பெரிய உயிர்க்கொல்லி பக்கவாதம். ஆபத்துக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒரு நபரை இந்நோய் ஒரே விநாடியில் தாக்கி வீழ்த்திவிடும். மரணம் என்று தீர்மானிக்கப்பட்டால் அது சில கணங்களில் சம்பவிக்கலாம். இல்லையென்றால் அவர் சில நாட்களுக்கு வாழலாம். பக்கவாதத்தின் இன்னொரு அம்சம் அது வழக்கமாக மூளையை பாதிக்கிறது. பக்கவாதத் தாக்குதலின் தீவிரம் மற்றும் அது உண்டான இடம் ஆகியவற்றைப் பொறுத்து நோயாளி முடமாகிவிடுகிறார். பேசமுடியாததாலும், வார்த்தைகளை ஒழுங்கமைக்க முடியாததாலும் நோய் எப்படி வந்ததென்றும், அதை அவர் எப்படி அனுபவித்தார் என்றும் பிறரிடம் விவரிக்கமுடியாமல் போய்விடலாம். எனவே, மாரடைப்பு அல்லது புற்றுநோயைவிட அதிக பீதி உண்டாக்கும் நோயாக பக்கவாதம் கருதப்படுகிறது.
ஆனால் நான் பக்கவாதத்தை அதிர்ஷ்டத்தின் திடீர் வாய்ப்பு என்றும் அது ஒரு நன்மை என்றும் கருதி அதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். தற்போது நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். அது கடவுளால் கொடுக்கப்பட்டது என்று கருதுகிறேன். கடவுள் நோயைக் கொடுத்து மனிதர்களை தண்டிக்கிறார் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அது இந்தியக் கருத்தாக்கம் கிடையாது. நாராயண குரு துன்பத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுள் உண்மையான கடவுளாக (ariya) வந்து உங்களைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் (sayujya) கொள்கிறார் என்று சொல்கிறார். நீங்கள் கடவுளுடன் ஒன்றிணைந்துவிட்டபோது மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் உங்களுக்குக் கிடைக்கிறது. ஒரே சமயத்தில் கடவுளுடனும் இவ்வுலகத்துடனும் வாழும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது.
நடராஜ குருவுக்கும் ஒருமுறை பக்கவாதம் வந்தது. நான் அவருடன் உட்கார்ந்திருக்கும்போதெல்லாம் அவர் சொல்வார், “நித்யா, இது ஒரு மோசமான வியாதி, உனக்கு இது வரக்கூடாது.” எனக்கு அந்த நோய் வரக்கூடாது என்று அவர் பிரத்யேகமாகச் சொன்னதால் அது அவருடைய ஆசி என்று நான் நினைத்தேன். அப்போதுகூட என்றைக்காவது ஒருநாள் அது எனக்கு வரும் என்று நான் பயந்தேன்.
பக்கவாதத்திற்கான அறிகுறிகள் தெரிந்ததும் வைத்ய மடத்தைச் சேர்ந்த சிறந்த இந்தியமுறை மருத்துவரான செறிய நாராயணன் நம்பூதிரியிடம் விரிவான ஒரு சிகிச்சையை மேற்கொண்டேன். சிகிச்சைக்குப் பிறகு அச்சிகிச்சைக்கு என்று ஒரு ஒழுங்கு நியதி இருக்கிறது என்று வைத்தியர் சொன்னார். அந்த ஒழுங்கிலிருந்து நான் விலகினால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்றும் சொன்னார். ஒரு ஒழுங்கை மீறினால் உண்டாகும் விளைவைப் பற்றிச் சொன்னால் நிறைய பேர் அதை ஒரு தண்டனையாகத்தான் கருதுவார்கள். நான் அந்த ரீதியில் எப்போதும் சிந்தித்தது கிடையாது. பயணம் மேற்கொள்ளவோ, பேசவோ கூடாது என்பது எனக்கு இடப்பட்ட நியதி. மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அன்றே, முதியவரும் நோயுற்றவருமான ஆர். கேசவன் வைத்தியரைப் பார்க்க விரும்பினேன். அங்கிருந்த அவருடைய மனைவி எனக்குக் கஞ்சி கொடுத்தார்.
அடுத்த நாள் காலை விடைபெற்றபின் ஆறுநாட்கள் விரிவான பயணம் மேற்கொண்டேன். கடும் வெயிலில் காரில் பிரயாணம் செய்து மூன்று குருகுலங்களுக்குப் போனேன். அது என்னை கடுமையாக களைப்படைய வைத்தது. அங்கிருந்து தலைச்சேரியிலிருந்த அனந்தனுடைய இடத்துக்குப் போனேன். மாலை ஐந்து மணிக்கு கனகமலா குருகுலத்தின் பிரதான கட்டிடத்துக்கான பூமிபூஜை நடைபெற இருந்தது. ஆனால் மாலை நான்கு மணிக்கு எனக்கு பக்கவாதம் வந்துவிட்டது. ஒரே வினாடியில் வந்து முடிந்துவிட்டது. ஆனால் அந்த ஒரே வினாடியில் எழுபத்தாறு வருடங்கள் நான் கற்ற அனைத்தும் என்னை விட்டுப் போய்விட்டது. என்னுடைய பெயரையும், அடையாளத்தையும் கூட நான் மறந்துவிட்டேன். எல்லாம் போய்விட்டது.
அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு படுக்கையில் நான் கிடத்தப்பட்டேன். எனக்கு வந்தது பயங்கரமான பக்கவாதம் என்பதை நான் பிறகு தெரிந்துகொண்டேன். மெதுவாக நினைவு திரும்பியது. அதன் பிறகு, சுவாசம் என்ற உயிரின் ஒரே அறிகுறியுடன் மட்டுமே இருந்த ஒரு பிணத்தைப் போலத்தான் என் உடல் இருந்தது. சில நாட்கள் கழித்து உணர்வு திரும்ப ஆரம்பித்தது. எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உடனடியாக எனக்கு ஒரு கடிதம் எழுதியதுடன் பக்கவாதத்துக்கு மருந்தும் அனுப்பினார். அதற்குப் பெயர் பத்யம் (பாதை தவறாமை). அதை நான் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பன்னிரண்டு நாட்களுக்கு அவர் எனக்கு மருந்தைக் கொடுத்திருந்தார். நோய் குறைந்த மாதிரி தெரியவில்லை. பிறகு இன்னொரு பன்னிரண்டு நாட்களுக்கான மருந்தைக் கொடுத்தார். அடுத்து தன்னுடைய இடத்துக்கே வந்து என்னை சிகிச்சை மேற்கொள்ள அழைத்தார்.
எனக்கு ஏற்பட்ட பக்கவாதத் தாக்குதலுக்கும், வழக்கமாக உண்டாகும் நோய்க்கும் வித்தியாசம் உள்ளது என்பதை இந்த இடத்தில் சொல்ல் விரும்புகிறேன். மருத்துவர் என்னுடைய கவனத்தை என் வலது காலின் மீது செலுத்தும்படி சொல்லி கால்விரல்களை அசைக்கச் சொன்னார். எவ்வளவு முயன்றும் என்னுடைய கால் விரல்களில் அசைவே இல்லை. பிறகு அவற்றை லேசாக என்னால் அசைக்கமுடிந்தது. உயிரின் முதல் அறிகுறி என்னிடம் உண்டானது. ஒவ்வொரு இயக்கமும் மீண்டும் என்னிடம் திரும்பும் என்றும், பிறகு நான் என்னுடைய இயல்பான சுயத்தை அடைந்துவிடுவேன் என்றும் மருத்துவர் சொன்னார். அவர் சொன்னதில் நம்பிக்கை பெற்ற நான், அன்று முதல் இந்த நோய் பற்றிய பயத்தை கைவிட்டேன். மறுவெளிப்பாட்டின் அதிசயத்தைக் காணத் தொடங்கினேன். இறந்துபோன நான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறுவெளிப்பாடு கொள்கிறேன். என்னுடைய வலது கண்ணும் வலது காதும் சரியாக இயங்கவில்லை. பிறகு கொஞ்சம் வெளிச்சத்தைப் பார்க்கத் தொடங்கினேன். பிறகு முன்பு போலவே என்னுடைய வலது கண்ணால் பார்க்கமுடிந்தது. காதும் கேட்க ஆரம்பித்தது. வாழ்வின் இந்த இரண்டு முக்கிய புலன்களும் தெளிவான மறு இயக்கம் பெற்றன.
நாராயண குருவின் ‘தெய்வ தசக’த்திலிருந்து இரண்டு செய்யுள்கள் என்னுடைய நினைவுக்கு வந்தன.
பரம்பொருளே, படைப்புச் செயல் நீயே,
படைப்பின் பலவகையும் நீயே,
கடவுளே, உன்னிலிருந்தன்றோ
எல்லாம் படைக்கப்பட்டன!
நீதானே மாயை, மாயையை இயக்குபவன் நீதானே?
மாயையை மகிழ்ந்து கொண்டாடுபவனும் நீதானே?
உண்மையானவனும் நீதானே?
மாயையை விலக்கி
தூய இணைப்பை வழங்குபவனும் நீதானே?
Sayujya என்கிற அந்த திவ்ய இணைப்புக்காக ஒவ்வொரு கணமும் நான் காத்துக் கொண்டிருந்தேன். நான் இந்த மூன்று விஷயங்களுக்கு சுருதி சேர்க்கப்பட்டிருந்தேன்.
பரம்பொருள், படைப்பு மற்றும் படைக்கப்பட்ட உயிர்கள்
கடந்தநிலை (Transcendence) என்கிற உயரிய இரக்க குணம் கொண்ட கடவுள் ஒருவர் உண்டு என்பது உண்மைதான். அந்த கடந்தநிலையில் ஒருவருடைய ஆன்மாவின் உண்மையான வெளிப்பாடு நிகழ்கிறது. அந்த மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டால் அதன்பின் காலதாமதம் என்பதே கிடையாது. நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது இருமினால்கூட என் உடலின் எல்லா முக்கிய உறுப்புகளும் ஒரு புதிய வாழ்வை அனுபவிக்கின்றன. இப்படியாக ஒரு முதிய இறந்த உடலிலிருந்து மறைக்கப்பட்டிருந்த ஒரு உயிர் வெளிவருகிறது. அது ஓர் அதிசயமாக மாறுகிறது.
என்னுடைய உடலில் நடக்கும் ஒரு சிறிய அசைவுக்காக காத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது பயன்தரும் செயல்தான். ஏனென்றால் அந்த உயிர் மீண்டும் திரும்பிவிட்டது. எனக்கு சிரமத்தைக் கொடுத்த மொழியும் அனேகமாக மீண்டுவிட்டது. பக்கவாதம் வந்த சில நாட்களிலேயே என்னால் பேசமுடிந்தது. ஆரம்பத்தில் நான் நினைவுகூர முயன்ற வார்த்தைகள் வரவில்லை. ஆனால் இப்போது அந்த நிலையிலிருந்து விடுபட்டு நான் விரும்பும் வார்த்தைகளை என்னால் நினைவுகூர முடிகிறது.
இப்போது என்னுடைய இடதுகால் உயிர் இயக்கத்துடன் இருக்கிறது. ஒருவகையில் இறந்துபோய்விட்ட என்னுடைய வலதுகால் மெதுவாக என்னுடைய இடதுகாலுடன் ஒத்துழைக்கத் தொடங்கியுள்ளது. அதே போல, என்னுடைய வலதுகை இயக்கமற்று இருந்தது. நான் ஓவியம் வரையத் தொடங்கினேன். ஆனால் என்னுடைய வலதுகை விரல்களால் எதையும் பிடிக்கமுடியவில்லை. அதனால் என்னுடைய வலதுகைக்கு துணைபுரியும்படி இடதுகையைப் பயன்படுத்தி கோடுகளை வரைந்தேன். இந்த முறையில் கனகமலாவில் நான் இருபத்து ஒன்பது சூர்யோதயங்களை வரைந்தேன். நான்கு அல்லது ஐந்து ஓவியங்களை மட்டுமே இடது கையாலேயே வரைந்தேன். இடது கையின் உதவியால் தூரிகையை வலதுகையில் வைத்து அதை இடது கையால் பிடித்துக் கொண்டேன். நான் பார்த்த வண்ணக் காட்சிகளை வரைந்தேன். அதை நீங்கள் பார்த்தால் எனக்கு நடந்த எதையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியாது. என்னுடைய அழகியல் உணர்வு, நிறங்களின் கூட்டு மற்றும் அமைப்பு முறை – இவையெல்லாம் சரியாக இருக்கும். கனகமலாவை விட்டுச் செல்லத்தயங்கினேன். ஆனால் இங்கும் அழகான சூர்யோதயங்கள் உள்ளன என்று கேள்விப்பட்டேன்.
சில நாட்கள் நான் உள்ளேயே இருந்தேன். நேற்றுதான் முதன்முதலாக காலை ஆறுமணிக்கு கிழக்குப் பக்கம் போய் வரைந்தேன். இன்று இன்னும் கொஞ்சம் தாமதமாக எழுந்து அந்த இடத்துக்குப் போய் அமைதியாக உட்கார்ந்து வரைந்தேன். எல்லாம் எளிமையாக நடந்தது.
நாராயண குரு ariya (உண்மையான ஒன்று) என்று அழைப்பது நாம் உள்ளார்ந்த ஆற்றல் (potential) என்று சொல்வதில் இருக்கிறது. நீங்கள் ஒரு முட்டையை எடுத்து அதற்குள் கோழிக்குஞ்சைத் தேடினால் உங்களால் அதைக் காணமுடியாது. அதேபோல பொருண்மையின் முதல் உருவாக்கம் உயிரின் எந்த அறிகுறியையும் காட்டுவதில்லை. ஆனால் முட்டையை ஒரு பெட்டைக்கோழி இருபத்தோரு நாட்களுக்கு அடைகாத்தால் அந்த முட்டைக்குள் ஒரு மாற்றம் நிகழ்கிறது. உயிருள்ள ஒரு கோழிக்குஞ்சு முட்டையிலிருந்து வெளிவருகிறது அதுபோல என்னுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டுள்ளது. எனவே, பக்கவாதம் என்ற நோய் எனக்கு வந்துவிட்டது என்று புலம்புவதற்கு பதிலாக “எனக்கு இந்த நோய் வந்தது அதிர்ஷ்டவசமானது” என்று நான் சொல்கிறேன். கடவுளின் அதிசயச் செயலை அறிய அது எனக்கு உதவுகிறது. பொருண்மையின் உள்ளார்ந்த ஆற்றலிலிருந்து எப்படி உயிர் பரிணமித்து, அது ஒவ்வொரு நாளும் ஒரு புதுத் தோற்றத்தைப் பெறுகிறது என்பதையும், அந்த வளர்ச்சி ஓர் அதிசய உணர்வுடன் இணைந்து உருப்பெறுகிறது என்பதையும் நான் அறிகிறேன். இறந்துபோன என்னுடைய உடலின் ஒரு பகுதி இழந்த வாழ்க்கையைப் பற்றிக் கொண்டு மீண்டும் அழகிலும், மகிழ்ச்சியிலும் வாழ விரும்புகிறது.
எனவே கடவுள் எனக்கு இட்ட சவாலை அவருடைய அதிசயத்தின் மூலமே ஏற்றுக்கொண்டேன். கடவுள் அக்கறையற்றவர் அல்லர். மாறாக இவ்வுலகிலுள்ள எல்லாவற்றைப் பற்றியும் எல்லாக் கூறுகளைப் பற்றியும் பொறுப்புணர்வு கொண்ட புத்திசாலி அவர். பொறுமையை கைக்கொண்டால் எப்படி வாழ்வு திரும்பிவந்து வாழ்க்கையின் எல்லா சாத்தியங்கள் வழியாகவும் கடந்து சொல்கிறது என்பதை நாம் அறிந்துகொண்டோம். வளர்ச்சியும் மாற்றமுமே வாழ்க்கை என்றுதான் நாம் முன்பு புரிந்துகொண்டிருந்தோம். ஆனால் நாம் இப்போது அதை வேறு வகையில் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே பக்கவாதம் மரணத்திற்கு எதிரானது. எதை வாழ்க்கை அடைகிறதோ அது இறந்துபோனது. கடவுள் உண்டாக்கும் படைப்பின் பெரு மகிழ்ச்சியை அது நமக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. கடவுளைப் பற்றியும் நோயைப் பற்றியும் அதுதான் என் கருத்து. நோய் என்பது கடவுளின் படைப்புமொழி.
தமிழில் – ஆர் சிவகுமார்
(‘அனுபவங்கள் அறிதல்கள்’ புத்தகத்திலிருந்து)