நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜட*ம்
தவாபாங்காலோகே பதிதமனுதா*வந்தி ஶதஶ:
கலத்வேணீபந்தா*: குசகலஶவிஸ்ரஸ்தஸிசயா
ஹடா*த் த்ருட்*யத்காஞ்ச்யோ விகலிததுகூலா யுவதய:
பாடல் – 13
அருள்நிறை அன்னையே,
உன் அருட்பார்வை ஒருவன் மீது பட்டுவிட்டால்
அவன் கிழவனென்றாலும், முரடனென்றாலும்
கலவியின்பம் தூண்டத்தெரியாதவன் என்றாலும்
நூற்றுக்கணக்கான கன்னியர்
கிளர்ச்சிகொண்டு அவன்பின் செல்கின்றனர்
மோகத்தில் நாணம் துறக்கின்றனர்
கூந்தல் அவிழ்ந்து கலைவதை
கொழுமுலைமேலிருந்து ஆடை நழுவுவதை
அரைக்கச்சவிழ்ந்து வீழ்வதை
அவர்கள் உணர்வதுமில்லை
**
பன்னிரண்டாவது பாடலை முழுமை செய்யும் பாடல் இது. இந்தியாவில் இருபது நூற்றாண்டுகளாக, உபநிடதங்கள் உருவகித்தபடி அழகு என்பது புலனின்பம் சார்ந்ததாகவே கருதப்பட்டது. பிற்காலத்தில், கோயாவுக்குப் பிந்தைய (post-Goya), வான்கோவுக்குப் பிந்தைய (post-Van Gogh) ஐரோப்பியக் கலைமரபில் ஒரு புதிய பாதை தோன்றியது. அதன் உச்சமாக உருமாதிரியற்ற (non-representative) அழகுக் கொள்கை உருவானது. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தப் பாடலில், அழகை தானாக ஒளிரும் ஒன்றென்கிறார் சங்கரர். பொதுவாக, அழகு என்பது புலனின்பம் சார்ந்த மோகம் என்றோ சிற்றின்பத்திற்கான முன்விளைவு என்றோ கருதப்படுவதற்கு மாறான ஒன்று இது. இளமையோ, உடலழகோ, நல்லியல்போ, காமத் தூண்டலோ எவ்வித கவர்ச்சியும் இல்லாத ஒரு முதியவன் இங்கு முன்வைக்கப்படுகிறான். பட்டுடை அணிந்த இளங் கன்னியர் அனைவரையும் கவர்வது இயல்பு. அவ்வாறன்றி, நயமிலா மனமும், முரட்டுத்தனமும் கொண்ட ஒரு முதியவனைக் கண்டதும் கன்னியரெல்லாம் தம்மை மறந்து இசிவுகொள்வதாக காட்டப்படுகின்றனர். பெண்ணின் அழகில் ஆண் மயங்குவதாக விவரிப்பதே வழமை. இங்கோ, நூற்றுக்கணக்கான பெண்டிர் உடலழகோ, அக அழகோ அற்ற ஒரு கிழவன் மீது மோகம் கொள்கின்றனர். இந்தப் புதிரான கவர்ச்சிக்கு சொல்லப்படும் ஒரே காரணம் அன்னையின் அருட்பார்வை. ஆண்-பெண் இடையேயான, எதிரெதிர் துருவங்களுக்கிடையேயான ஈர்ப்பல்ல இது. இங்கே இயக்காற்றலாக, கவர்ச்சிக்குக் காரணியாய் இருப்பது அன்னையின் அருள். அன்னை தான் தேரும் பொருளைச் சுற்றி அழகெனும் சூறாவளியை எழுப்புகிறாள் போலும்!
அழகென்பது அடிப்படையில் அகவயமாக உணரப்படுவது. கண்டால் பேரின்பம் அளிக்கக்கூடிய நிலவிரிவுகூட ஒருவர் உளம் சோர்ந்திருக்கையில் காணும்போது வறண்டதாக, பொருளற்றதாக, பகைமை தோற்றுவிப்பதாகக் கூட தோன்றக்கூடும். மூளையில் அமைந்திருக்கும் புலனின்ப மையங்களை மின்னதிர்வு மூலமோ, வேதிவினை மூலமோ தூண்ட முடியும் என்றும், அதனால் புலனுணர் பொருள் ஏதுமின்றியே அழகு என்பதை உணர முடியும் என்றும் அறிவியல் இன்று நமக்கு நிறுவியுள்ளது. ஆனால், நரம்புகள் அதிர்வுகொள்வது மேலும் ஆழமான ஒரு நிலையில் என்பதை மட்டுமே இது உணர்த்துகிறது. அழகென்பது தன்னளவில் வெறும் உயிரணுசார்ந்த கிளர்ச்சி அல்ல. அது ஆன்மாவின் ஒரு வகைமாதிரியான எண்ணம் (normative notion). ஹான்ஸ் லூகஸ் டியூபர் சொல்லும் “வடிவமைதியின், வேதிவினையின், தொடர்பின் குறிப்பிட்ட பண்பை” பொருள்கொள்ளும் கருத்து. அதற்கு ஒரு அழகியோ, மின் அதிர்வோ, மூளையில் கசியும் பழைய நினைவோ காரணமாக இருக்கலாம். ஒரு காட்சியைக் கண்டு அனைத்து மனங்களும் “ஆ என்ன அழகு!” என வியக்குமென்றால், அதற்குக் காரணமாக இருப்பது உமை என்றும் திரிபுரசுந்தரி என்றும் விளிக்கப்படும் இயற்கை அன்னையேதான். அனைவருக்கும் மனம் என்ற ஒன்றையும் அம்மனதிற்கு அழகுணர்ச்சியையும் அளிப்பவள் அவளே. அழகை ஆராதிக்கும் கன்னியர் அன்னையின் மந்திரத்தில் கட்டுண்டு தன்வசமிழப்பதற்கு அதுவே காரணம். இங்கே நோயுற்ற கிழவனொருவன் மீது அவள் வீசிய அருட்பார்வையே அன்னையிடும் மந்திரம்.
கன்னியர் கிழவன் ஒருவன்பால் ஈர்க்கப்படுகின்றனர்; அக்கிழவன் அன்னையால் கவரப்பட்டவன்; அன்னையோ என்றுமுள இருப்பான சிவனை நாடுகிறாள். முந்தைய பாடலில் அம்பு தெய்வீகத்திலிருந்து மண்ணுலகு நோக்கி மேலிருந்து கீழாக எய்தப்பட்டது; இப்பாடலில் மண்ணுலகிலிருந்து தெய்வீகத்திற்கு மேல்நோக்கி பாய்கிறது.