ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6

எழவேண்டும் பின் உறங்கவேண்டும்
உண்ணவேண்டும் இணையவேண்டும்
என்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது
மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்?

                                                                           (ஆத்மோபதேச சதகம் – பாடல் 6)

‘மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்?’ எனும் அழுத்தமான கேள்வியுடன் முடிகிறது இப்பாடல்.  இனிவரும் பாடல்களில் விவரிக்கப்படவிருக்கும் பிரச்சினையும் தீர்வும் இங்கே முன்வைக்கப்படுகின்றன.  ஆன்மீக உலகில் கடவுள்-சாத்தான், நன்மை-தீமை, அநிகழ்வு-நிகழ்வு, கடந்தது-உள்ளுறைவது, பிரம்மம்-தர்மம், தனித்தது-சார்புடையது என பல முரண்கள் உண்டு.  மாறிக்கொண்டேயிருக்கும் வாழ்வவாக்கள் (விழைவுகள்) மற்றும் முழுமுதலின் மாறாவடிவம் ஆகியவையே இப்பாடலில் முன்வைக்கப்படும் முரண்கள்.

எந்த ஒரு உசாவலிலும் நம்மைக் கவர்வது நாமறிந்ததும் நிச்சயமானதும் தெளிவற்ற உணர்வும் கொண்ட உலகை நோக்கி பின்நகரும் புதிர்.  சர் ஆர்தர் எடிங்டன் இதற்கு உதாரணமாக ஒரு மேசையைக் கூறுவார்.  ஒரு மேசையைப் பயன்படுத்தும் இயற்பியலாளர் முன் இரண்டு மேசைகள் உண்டு என்பது அவரது கூற்று.  ஒன்று இயல்நிகழ்வானது, மற்றொன்று மெய்யானது.  இயல்நிகழ்வான மேசையை பார்க்கவும், தொட்டுணரவும், பயன்படுத்தவும் முடியும்.  அதே சமயத்தில் ஒரு இயற்பியலாளனாக அது மெய்யானதல்ல என்று அவனுக்குத் தெரியும்.  அவனைப் பொறுத்தவரை, கண்ணுக்குப் புலப்படாததும் சுழலும் இயல் ஆற்றலுடன் எப்போதும் அசைந்துகொண்டிருக்கும், பாய்ம நிலையிலிருக்கும் வேகமாக நகரும் மூலக்கூறுகளின் திரளே மெய் என்பது.  எனவே, ஒருவன் தான் அறிந்த பொருளான மேசையின் மெய்மையை முனைப்புடன் மதிப்பிட முயலும்போது அம்மேசை தற்கோள்களாலான புரிந்துகொள்ளமுடியாத உலகில் மறைந்துபோகிறது.

வேதாந்தியின் நிலை இயற்பியலாளனின் நிலையிலிருந்து பெரிதும் வேறுபட்டதல்ல.  தோற்றமும் மெய்மையும் தம்முள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் புதிரை அவரும் கையாள வேண்டியிருக்கிறது.  புலன்கள் தோற்றத்தால் எளிதில் பாதிப்படைகின்றன.  ஆனால், மெய்யானது நழுவிச் செல்வதாக (மழுப்பலானதாக), அதை உயிர்ப்புடன் தொடரும் மனதின் இயல்புக்கு மாறானதாக இருக்கிறது.  என்னதான் நம்பிக்கை தராததாக இது இருந்தாலும், ஒருவனால் தேடலை விட்டுவிட்டு, தோற்றத்தை முன்முடிந்ததாக ஏற்க முடியாது.

நாம் உலகியல்புடையவர்கள்.  தனது அச்சில் சுழன்று கதிரவனைச் சுற்றி வருவது பூமியின் செயல்சார் இயல்பு.  இதன் விளைவாய் நாம் பகல்-இரவு மாற்றத்தை துய்த்துணர்கிறோம்.  பூமிக்கு ‘தரா’ என்றொரு பெயருண்டு.  தரா என்றால் தாங்குவது. அவ்வவற்றின் உள்ளார்ந்த ஆற்றல்களால், அவற்றின் அறத்தால் தாங்கப்படும் பல பொருட்களும் பூமியில் உள்ளன.  தர்மம் (அறம்) என்பது தனித்துவத்தின் அனைத்து வடிவத்திலும் அமைப்பு மற்றும் செயல்சார் மறையாக இருப்பது. தனியனில் உள்ள அமைப்பு மற்றும் செயல்சார் அமைவு (system) என்பது தன்னாளுகை கொண்ட அலகுதான் என்றாலும் அது சிக்கலான ஒரு அமைவின் பகுதியே.  வானில் ஒளிரும் விண்மீனுக்கும் பெருமகிழ்வுடன் அதை உற்றுநோக்கும் கண்ணிற்கும் இடையிலான இயல்சார் இணக்கத்தை அவ்வளவு எளிதாக விளக்கிவிட இயலாது.

முந்தைய பாடலில் பகல்-இரவு ஏற்படுத்தும் உள உடலியல் செயல்வினை பேசப்பட்டது. நாம் விழித்திருந்தாலும் உறங்கிக்கொண்டிருந்தாலும் மாறாத சாரம் ஒன்று நம்முள் உள்ளது.  உபநிடதங்கள் இதை, அனைத்தும் தழுவிய ஒருமைக் கொள்கை – பிரம்மம் – என்று குறிப்பிடுகின்றன.  நாம் உறங்கும்போதுகூட உடலின் முக்கிய செயற்பாடுகள், தனித்துவ அமைவை அதன் உச்சபட்ச ஒருங்கிணைவு நோக்கி சீரமைக்கும் நுண்ணறிவால் கண்காணிக்கப்படுகின்றன; இயங்கிக் கொண்டிருக்கும்படி செய்யப்படுகின்றன.  இந்த ஒருங்கிணைவு அமைதி, மகிழ்ச்சி, ஒருமை என உணரப்படுகிறது.  முந்தைய பாடலில் ஏற்றப்படாத விளக்கின் நோக்கும் ஒளி எனக் கூறப்பட்ட இந்த மாற்றமில்லா சாரமே நம் அடிப்படை இயல்பு.

அறமெனப்படுவது நமது உள்ளார்ந்த இயல்பு (second nature).  மாற்றமில்லாததையும் மாறிக்கொண்டேயிருப்பதையும் இணைக்கும் புதிர்த்தன்மை கொண்டது. தனியாக்கப்பட்ட உயிருருக்கள் என்ற வகையில் அறத்தின் பண்பேற்றங்களே நாம்.

நம் இயல்பின் சிக்கலான இயங்கமைவில் முதன்மையான பல இருமைச் செயல்பாடுகளில் ஒன்றுதான் விழித்தல்-உறங்குதல் என்பது.  நாம் விழித்திருக்கையில் உடலூட்டம் மற்றும் மனமகிழ்வுக்கான தேவைப்பாடு கூர்மையாக உணரப்படுகிறது.  உணவையும், சலிப்புணர்விலிருந்து தப்பிக்க உதவும் கேளிக்கைகளையும் தேடுவதே பலருக்கும் வாழ்வின் முக்கிய நாட்டமாக உள்ளது. (இக்கருத்தை உணர்த்த) உண்பதைக்குறிக்க மலையாள மொழியில் பல சொற்கள் இருந்தபோதும் குரு கவனமாக ‘புஜிச்சிடேணம்’ என்ற சொல்லை தேர்ந்தெடுத்திருக்கிறார். ‘பூ’ என்பது வெளிப்படுவது.  ‘புஜ்’ வெளிப்பாட்டை நிகழ்த்துவது.  அது போகத்துடனும் (துய்ப்பதுடனும்) தொடர்புடையது.

துய்ப்பவன் ‘போக்தா’ எனப்படுகிறான்.  நாம் ஒரு புலன் முகமையை அறிபவன், செய்பவன், துய்ப்பவன் என்ற மூன்று வழிகளில் உணர்கிறோம்.  முதலிலிருந்து நான்காம் பாடல் வரை நமது கவனம் அறிபவனில் குவிந்திருந்தது.  ஐந்தாவதில் செய்பவனை நோக்கி திருப்பப்பட்டது.  இப்பாடலில் நம் கவனம் துய்ப்பவனை நோக்கி நகர்கிறது.

உடலுக்கான ஊட்டத்தைத் தேடுவதென்பது வாழ்வவாக்கள் பலவற்றுள் ஒன்று மட்டுமே.  மனிதன் என்பவன் வெறும் உடல் மட்டுமல்ல என்பதையே ‘மனிதன் அப்பத்தால் மட்டுமே பிழைப்பதில்லை’ என்றார் யேசு.  அறியும், எண்ணும், நுணுகிக்காணும், மதிப்பிடும் திறன் கொண்ட ஒரு ஆற்றலால் உடல் இயக்கப்படுகிறது.  இவ்வியற்பாடே ஆன்மா அல்லது ஆவி எனப்படுகிறது. பரவுதலே ஆவியின் இயல்பு.  ஆவியின்/ஆன்மாவின் தனிப்பண்பே அது சார்ந்திருக்கும் பிரபஞ்ச ஆன்மாவின் தூய இருப்பை நோக்கி மீண்டும் மீண்டும் செல்வதே.  உடலின் எல்லைகளுக்குள் சிறைப்பட்டிருக்கும்போது அது இயல்பாய் இருப்பதில்லை.  தன் மட்டத்தைத் தேடும் (கண்டடையும்) நீர்போல, ஆன்மாவானது எப்போதும் எல்லையற்றதை நாடிக்கொண்டேயிருக்கிறது.  உடலின் தேவைகளை நிறைவுசெய்ய முயலும் தனியனின் செயல் அறச்சார்புடையது.  ஆனால், தனியனின் உடல், குடும்பம், குலம், குழு, நாடு இவற்றின் எல்லைகளைக் கடக்கவேண்டும் என்ற ஆன்மாவின் தேவையோ அதன் முழுமுதல் அறமேயாகும்.

முழுமுதலுக்கான ஆன்மாவின் நாட்டம், சேய் தாயிடம் கொள்ளும் பற்றுக்கு ஈடானது.  ஒருவருடன் ஒருவர் தொடர்புறுத்திக் கொள்வதற்கான கட்டாயத் தேவை இருவருக்குமே உள்ளது.  சேயும் தாயும் தனித்தனி உடலைப் பெற்றிருந்தாலும் ஒன்பது மாதங்கள் இருவரும் ஒன்றாக இருந்தவர்கள்.  தாயின் கருப்பையில் சேயிருக்கும் பேறுகாலம் ஆவி மற்றும் அதன் இயல்வெளிப்பாடு ஆகியவற்றின் பல மறைசெய்திகளை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.  கரு உருவாவதன் முன்பே, பல யுகங்களாக – பிரபஞ்சத் தோற்றம் முதற்கொண்டே – சேயின் ஒரு பகுதியும் தாயும் ஒன்றாகவே இருக்கின்றனர்.  தாயெனும் நாற்றங்காலில் தன் கழுவாயை (‘at-one-ment’) மீளப்பெறும்போதுதான் சேய் தன் இயல்புடன் இருப்பதாக உணர்கிறது.  தாயும் அதேபோல் உணர்கிறாள்.  சேய்க்கு பாலூட்டுகிறாள், அணைத்து முத்தமிடுகிறாள். இருவரும் இணைந்திருக்கும்போது தங்களையே மறக்கின்றனர்.  விரிவாக்கம் மூலம் தன் விடுதலையைத் தேடும் ஒவ்வொரு முயற்சியும் ஆன்மாவை கட்டுக்குள் அடைக்கிறது.  இது ஒரு புதிர்தான்.  சேயை தந்தைக்கு அறிமுகம் செய்கிறாள் தாய். அத்தந்தையிடமிருந்தே சேய் தன் காலமற்ற மறுபாதியைப் பெறுகிறது.  சேயின் அன்பு தந்தையிடமும் பின் சகோதர சகோதரிகளிடமும் விரிகிறது.  இவ்வாறாக, அன்பு ஆர்வ எல்லையத்தை விரிவாக்குவதோடு புதிய பிணைப்புகளையும் உருவாக்குகிறது.

தனியனின் சிறப்பியல்புகளை வளர்க்கும், உயிராற்றலைப் பேணும், அவனது வளரும் ஆளுமையாக மலரும் அறம் பல்நிலை உருவாக்கமும் பல்நிறக் கருத்தும் கொண்டது.  தனித்துவத்தின் ஒரே அடிப்படை என்ற நிலையில் அது முழுமுதலிலிருந்து வேறுபடுத்தப்படாதது.  இயல் உருத் தோற்றத்தின் முதற்காரணமான அதுவே இடம்சார் நீட்சிப்புலத்திற்கு இயக்கத்தைக் கொடுக்கும் காலம்சார் செயற்பாடாகும்.  தனித்துவத்தின் புறமெய்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அது, இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மனித அளவில் உளவியல் நாட்டங்களுடன் செயலாற்றக்கூடிய அமைப்புசார் இணக்கத்தின் அறுதியான வடிவங்களை மேற்கொள்வதற்கென தெளிவில்லாததும், வேறுபடுத்தப்படாததுமான ஆற்றலை வழிப்படுத்துவதும் ஒழுங்கமைப்பதுமான பரிணாம நிகழ்முறை. வாழும் உயிரியின் இயங்கியல் என்ற வகையில், உயிரியின் தற்பேணலுக்கும் நிலையான அமைவாக அதன் வாழ்நாளை நீட்டிக்கவும் உகந்த வினையையும் எதிர்வினையையும் முடிவெடுக்க உதவும் கணிப்புப்பட்டி போல் உதவும், தக்கவைத்துக்கொள்ளப்படும் நினைவுகளின் கிடங்கு அது. வாழ்வவாக்களின் நாட்டமான அது, இன்பநாட்டம் கொண்ட தொகுவிருப்பின் கலவை; ஒவ்வொரு குருட்டு இயக்கத்திலும் தன்னிலை உணர்ந்த முயற்சியிலும் அதன் நீளவாட்ட வரலாற்றால் கட்டுப்படுத்தப்படுவதும் அறுதியிடப்படுவதுமான ஒரு தொடர் நிகழ்முறை.  நேரடியான இடைவினை முகமையாக தன்னை நான் என்னும் உணர்நிலையில் சுய-விழிப்புடன்  அடையாளப்படுத்திக்கொள்ளும் அது தன்வய மற்றும் உள் உணர் நடத்தை, பெறப்பெற்ற பழக்கங்கள், தகவமைவு, தன் நெகிழ்வான சமநிலையை பாதுகாத்துக்கொள்வதில் கருத்தாக இருக்கும் – தன்னைத்தான் ஒழுங்கமைத்துக்கொள்ளும் அமைவுக்கு உதவும் விருப்பச்செயல்கள் ஆகியவற்றைப் பேணும் சமநிலை.

அத்தகைய சிக்கலான ஒரு நோக்கிலேயே அறத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த அறமே ஒருவனில் உள்ள அறிபவன், செய்பவன், துய்ப்பவன் என்பனவற்றின் நேரிணைகளாக காலந்தோறும் புறவயப்படுத்தப்படும் மக்கள், பொருட்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் பொருளை (அர்த்தத்தை) முடிவு செய்கிறது.  ஒரு சூழலுக்கு பொருள் கற்பித்தல் என்பது ஒரு வாழ்வவாவை உயர்த்திப்பிடிப்பதற்கும் தாக்குதலிலிருந்து அமைப்பைக் காத்தலுக்கும் இணையானது.  பொருளென ஒருவன் காணும் மீத்தெளிவு இழைவே ஒரு திரளின் இணைவையோ அல்லது முழுக்காட்சியையோ உண்டாக்குகிறது.  ஒரு முழுக்காட்சியை வகுத்தல் என்பதை இந்திய உளவியலாளர் ‘அர்த்தத்தை’ உருவமைத்தல் என்பர்.  அறமும் பொருளும் இணையும்போது ஒரு தனியனை அவை இன்பநாட்டத்தை நோக்கி உந்துகின்றன. இன்பநாட்டம் இணைவுக்கானதாகவோ (ராகம்) பிரிவுக்கானதாகவோ (துவேஷம்) இருக்கலாம்.  இவ்விருமுக கட்டாயப்படுத்தல் என்பது அடிப்படையில் இன்ப இயல்பூக்கம் சார்ந்தது.

பகவத் கீதையின் பதின்மூன்றாவது அத்தியாயம் நம் வாழ்வின் பாதையை பாதிக்கும் ஏழு மாற்றமைவுகளை கோடிட்டுக் காட்டுகிறது.  அவை இச்சை (அவா), துவேஷம் (வெறுப்பு), சுகம் (இன்பம்), துக்கம், சம்ஞாதம் (நாட்டங்களின் தொடர்பின்மை), ஜீவன் (உயிர்க்கொள்கை), ஸ்தைர்யம் (உயிர்வாழ் விருப்பு) ஆகியன.

இத்துடன் தொடர்புடைய பிறிதொரு குறிப்பு பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் காணக்கிடைக்கிறது.  அதில் ஆன்மீக இணைவுக்குத் தடையான ஐந்தை பட்டியலிடுகிறார் பதஞ்சலி.  யோகி விழையும் தனிமையும் (கைவல்யம்) முழுமுதலுடன் ஒன்றுவதற்கான வேதாந்தியின் விழைவும் கோட்பாடு ரீதியில் வேறுவேறானவை அல்ல.  அணுகும் நெறிமுறைகளில் மட்டும் வேறுபாடு உண்டு. பதஞ்சலி கூறும் தடைகளை ஆராய்வதன் மூலம் கீதை கூறும் ஏழு மாற்றமைவுகளை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.  பதஞ்சலியின் ஐந்து தடைகள் – கிலேசங்களாவன: அவித்யா (அறியாமை), அஸ்மிதம் (தன்முனைப்பு), ராகம் (ஈர்ப்பு), துவேஷம் (வெறுப்பு), அபினிவேசம் (வாழ்வைப் பற்றல்).

கீதையைப் பொறுத்தவரை, இயற்கையின் (பிரக்ருதி) மும்மை நடைமுறை மற்றும் ஆவியின் (புருஷன்) தனிப்பண்பான நனவு இவை இரண்டுமே நம் வாழ்வின் அடிப்படை மூலக்கூறுகள்.  காரணகாரியத்தின் திரளுக்கு இயற்கை பொறுப்பாகிறது. அதேபோல் இன்பநாட்டத்திற்கு ஆவியின் நனவு பொறுப்பாகிறது.  ஆவியானது இயற்கையால் ஆதிக்கம் செலுத்தப்படும் மெய்யில் சிறையுண்டிருப்பதால், இன்பத்திற்கான நாட்டம் ரஜோ தமோ குணங்களின் திரித்தல் மற்றும் மறைப்புக் கொள்கையால் மாசுபடுகிறது.  சத்வகுணமே கூட இன்பம்தரும் எதனுடனும் தன்னை இணைத்துக்கொள்ளும் விழைவு கொண்டது.

இக்குறைகளைக் கண்டறிவதிலும், அவற்றைக் களைவதிலும் யோகிகளுக்கும் வேதாந்திகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு.  பதஞ்சலியின் யோகசூத்திரம் (பகுதி-2, சூ-17) காண்பவனும் காணப்படுவதும் ஒன்றாவதன் காரணம் தவிர்க்கப்படவேண்டும் என்கிறது. நாம் காணும் உலகிலிருந்து விலகிச் செல்வதையோ ஒதுங்கலையோ கீதை பரிந்துரைப்பதில்லை.  மாறாக, எல்லாவற்றிலும் உறைவதாக முழுமுதலைக் காணும் தெளிவான தரிசனத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றே கூறுகிறது.  எல்லாவற்றிலும் தன்னை (ஆன்மாவை) அறிந்துகொள்வதே உயர் குறிக்கோள் என்கிறது ஈசாவாஸ்ய உபநிடதம்:

அனைத்துயிரையும் தனதன்றி பிறிதொன்றாக எண்ணாதவனும்
தன் ஆன்மாவையே அனைத்திலும் உறைவதாகக் கொள்பவனும்
எதையும் வெறுப்பதில்லை.
அனைத்திருப்பிலும் ஒருமையைக் காண்பவனுக்கும்
அனைத்தையும் தன் ஆன்மாவாக அறிபவனுக்கும்
துயரம் ஏது?

நாராயண குரு தன் ‘யோக தரிசனத்தில்’ வேதாந்திகள் மற்றும் யோகிகளின் நிலையை பின்வருமாறு ஒன்றிணைக்கிறார்:

மனதை எப்போதும் ஒருமுகப்படுத்துவதும்
பகுத்தறியும் ஆன்மாவுடன் இணைப்பதும்
தன்னடக்க வடிவாய் இருப்பதுமே யோகமெனப்படும்.
காண்பவனும் காட்சியும் காணப்படுவதும் இல்லாமலாகும் இடத்தில்
இருதயம் ஒன்றிணைக்கப்படவேண்டும்
உள்ளுறை நினைவுக்கூறுகள் உள்ளவரை
யோகமறிந்தவன் அதையே யோகமென்பான்.

விடுதலை கோருவதே நனவின் இயல்பென்றாலும் அதற்குக் கிடைக்கும் கருவி அதன் குறிக்கோளை தோற்கடிப்பதாகவே இருக்கிறது. முதலில் விழிப்புநிலை; அதைத் தொடர்ந்து ஒரு பக்குவப்படுத்தலாக மொத்த விளைவின் தொகுப்பு என்பதே அனுபவம் நிகழும் வரிசை முறை.  அத்தகைய பக்குவப்படுத்தல் எதிர்காலத்தில் அதே அனுபவம் மீண்டும் ஏற்படவே நிச்சயம் வழிவகுக்கும்.  அவ்வனுபவம், அதையொட்டி வரும் உளப்பாடு வலிமிக்கதாயிருந்தால் விட்டோடுதல் அல்லது எதிர்த்துப்போரிடும் எதிர்வினை என்பதாக இருக்கிறது. அல்லது அந்த உளப்பாடு இன்பமளிப்பதாயிருந்தால் கவர்ச்சியால் நிரம்பியிருக்கிறது.  நனவை நடைமுறைகளுடன் அடையாளப்படுத்துதல் ஒருவனது மெய்யான இயல்பை மறக்கச்செய்கிறது.  இப்பாடலில் குரு வருந்துவது இதற்காகவே!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s