நான் சென்னைக்குத் திரும்பியபோது, விவேகானந்தா கல்லூரியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி மாணவர்களை எதிர்ப்பில் ஈடுபடச் செய்த்து. மொத்த கல்லூரியும் வேலை நிறுத்தத்தில் இறங்கியது. சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு செல்லப்பெயர்கள் உண்டு – மாநிலக் கல்லூரியின் இளவரசர்கள் (Princes of Presidency College), ராணி மேரி கல்லூரியின் ராணிகள் (Queens of Queen Mary), பச்சையப்பாவின் ரெளடிகள் (Rowdies of Pachayappa), கிறித்தவக் கல்லூரியின் கனவான்கள் (Gentlemen of Christian College), விவேகானந்தா கல்லூரியின் சாம்பார்கள் (Sambars of Vivekananda College). விவேகானந்தா கல்லூரியில் பயிலும், அமைதியை விரும்பும் சாதுவான பிராமண மாணவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்குபவர்களல்ல என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். கல்லூரி நிர்வாகம் ஆடிப்போனது. ராமகிருஷ்ண மடத்தின் பொதுச் செயலர் மாதவானந்த சுவாமி நேரடியாக பார்வையிட வந்தார். என்னிடம் பயின்ற தத்துவ மாணவர்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதைக் கண்டார். “இவ்வளவு சிறிய வகுப்பின் ஆசிரியர் ஒருவர் முழு கல்லூரியையும் பாதிப்பார் என்றால் அவர் நிச்சயம் தகுதி உடையவராகத்தான் இருப்பார். அவரை நிர்வாகம் வெளியில் அனுப்பக் கூடாது” என்றார் சுவாமி. சுவாமி நியாயத்தின் பக்கம் நின்றது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனாலும், கோடை விடுமுறைக்குப் பின் நான் கல்லூரியில் இருந்து விலகிக் கொள்வதாக முதல்வரிடம் வாக்களித்தேன். அதன் பின் வேலை நிறுத்தம் இருக்கமுடியாது.
மீண்டும் வர்க்கலைக்குத் திரும்பிய நான் குருகுலத்தின் பன்முக வளர்ச்சிக்காக புத்தார்வத்துடன் பணியாற்றத் தொடங்கினேன். அப்போது, சிங்கப்பூரில் சர்வேயராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு குஞ்ஞுகிருஷ்ணன் என்பவர் இந்தியா திரும்பியிருந்தார். அவர் குருவைப் பார்க்க வந்தார். சிவகிரி மடத்திற்கும் சிவகிரி உயர்நிலைப் பள்ளிக்கும் இடையில் இருந்த அவருக்கு சொந்தமான ஒரு சிறு குன்றில் ‘ப்ரஹ்மவித்யா மந்திரை’ அமைக்க வேண்டும் என்று குரு விரும்பினார். தன்னுடைய மாணவர்கள் சிலரை அனுப்பி அளவுகள் எடுத்து எல்லைகளைக் குறிக்க ஏற்பாடு செய்தார் குஞ்ஞுகிருஷ்ணன். அதில் ஒரு துடிப்பான இளைஞன் எம்.என்.பிரசாத். பின்னொரு காலத்தில் நிர்வாகத் தலைவராகி வர்க்கலை குருகுலத்தை தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் போகிறவர் அவர் என அன்று யாரும் அறிந்திருக்கவில்லை.
ஒரு நாள் மாலை இளைஞர்கள் எல்லோரும் சென்ற பிறகு, அவரும் நானும் அன்றிரவு அந்தக் குன்றில் தங்கலாம் என்றார் குரு. மலையின் முகடு செம்மண் பாறையால் ஆனது. அகன்ற முந்திரி மரம் ஒன்று நிழல் பரப்பியிருந்தது. எங்கள் பாய், தலையணை, போர்வைகளை எடுத்துக்கொண்டு அப்பாறை மீது உறங்கச் சென்றோம். அன்றிரவு, நாராயண குருவுக்கும் தனக்கும் இடையில் இருந்த மிக அந்தரங்கமான அனுபவங்களைப் பற்றிப் பேசினார் குரு. கண்ணீர் பொங்க அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தேன் நான். கடற்காற்றின் லயத்தில் நாங்கள் உறங்கிப்போனோம். காலையில் நாங்கள் கண்விழித்தபோது எங்களது பாய்களை வெள்ளெறும்புகள் தின்றிருந்தன. போர்வைகளிலும் பெரிய துளைகள்!
கன்வ ஆசிரமத்தில் டாக்டர் மீஸுடன் தங்கியிருந்தபோது, டான் கோபா முகர்ஜியின் Face of Silence, மகேந்திரநாத் குப்தாவின் Gospel of Sri Ramakrishna, The Life of Sadhu Sunder Singh போன்ற பல புத்தகங்களைப் படித்தேன். அவை எல்லாம் என்னைப் பெரிதும் பாதித்தவை. “உண்மையான குரு”, “உண்மையான சீடன்” பற்றிய வரையறை என் மனதில் இருந்த்து. டாக்டர் மீஸை என் பிரியமான குருவாக வரித்தபோது என் அன்பு, இதயம், ஆன்மா அனைத்தையும் அவருக்கு அர்ப்பணித்தேன். அவரைப் பற்றிய நினைவு எனக்கு மிகவும் புனிதமான ஒன்றாக இருந்த்து. நடராஜ குருவுடன் இணைந்து அவரை என் குருவாக வரித்தபோது, அதேபோன்ற ஒரு வழிபாட்டு மனநிலையில் இருந்தேன். மகேந்திரநாத் குப்தாவைப் போலவே, நடராஜ குருவின் ஒவ்வொரு சொல்லையும் நான் பதிவு செய்துவந்தேன். இயேசு கிறிஸ்துவின் தூதர்களில் ஒருவன் போல் இருந்தேன். ஆனால் நடராஜ குருவுக்கு அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுதல் பிடிக்காது. என்னைச் சீண்டி என்னிடமிருந்த அதிகப்படியான பக்தியை ஒழிக்க நினைத்தார். ப்ரார்த்தனை அறையில் குருவை தரையில் விழுந்து வணங்குவது என் வழக்கம். ஒரு நாளில் முதல் முறை சந்திக்கும்போதும் அவரோ நானோ எங்காவது செல்வதற்கு விடைபெறும்போதும் மட்டும் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினால் போதும் என்றார் குரு.
ஐரோப்பிய உயர்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் குறைகாணும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மீஸ் குடும்பத்தினரின் சொந்த ஊர்களான ராட்டர்டாம், ஆம்ஸ்டர்டாம் ஆகியவற்றைப் பற்றி இழிவாகப் பேசுவார் குரு. என்னைத் துன்புறுத்த டாக்டர் மீஸின் பெயரை இழுத்து, குருவைப் பற்றி நான் கொண்டிருந்த லட்சிய பிம்பத்தை உடைக்க முயல்வார். உண்மையில் குரு என்ன செய்ய நினைத்தார் என்பது எனக்குப் புரியாது. அத்தகைய உரையாடல்களின் முடிவில் நான் கண்ணீர் சிந்துவதோ, என் இதயம் சுக்குநூறாக வெடித்து விடுமோ என்ற எண்ணத்துடன் அவ்விடத்தைவிட்டு அகலுவதோ நிகழும். நான் எப்போதும் அடக்கமாக, பணிவோடு இருப்பதை குரு விரும்பவில்லை. அது வெறும் பாசாங்கு என்றே சொல்வார்.
சமையலறையில் உதவி செய்ய, பக்கத்திலிருந்த குடியிருப்புகளிலிருந்து சில இளம் பெண்கள் குருகுலத்திற்கு வந்துகொண்டிருந்தனர். ஒரு நாள் ஒரு பெண் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். விசாரித்தபோது குருகுலத்தில் இருந்த ஒரு பையன் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக புகார் கூறினாள். பிரம்மசரியமே உயர்ந்த லட்சியம் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு அது பேரிடியாக இருந்த்து. நேராக குருவிடம் சென்று விஷயத்தை சொன்னேன். என் புகாரைக் கேட்ட குரு சிரித்துவிட்டு, “சுவாரசியமான விஷயம். நம் குருகுலத்தில் ஒரு கீசகன்!” என்று சர்வசாதாரணமாகக் கூறினார். பொதுவாக இத்தகைய விஷயங்கள் பிரார்த்தனைக்குப் பிறகு விவாதிக்கப்படும். குரு அன்று மாலை அவனைக் கண்டித்து குருகுலத்தில் இருந்து நீக்கி விடுவார் என நினைத்தேன். ஆனால், குரு காதலர் இருவரிடையே நிகழ்ந்த போராட்டம் பற்றிப் பேசினார். பெர்க்ஸனின் Two Sources of Morality and Religion பற்றியும் ஒரு நீண்ட உரை நிகழ்த்தினார். அன்றிரவு நான் மிகுந்த எரிச்சலடைந்தவனாக இருந்தேன். குரு பொறுமையிழந்து கூறினார், “ஒடுக்கப்பட்ட ஒரு பள்ளியாசிரியர் மகன்தானே நீ! உன்னால் எப்படி பாலுணர்ச்சி பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்? அதைப்பற்றிய ஆராக்கியமான பார்வையை வளர்த்துக்கொள்ள முடியும்? மொத்த கேரளமுமே பாலியல் பற்றிய மீயுணர்ச்சி கொண்ட ஒரு சமூகம். ஆரோக்கியமான மனநிலை கொண்ட ஒருவரால் மட்டுமே பாலியலை சரியாகப் புரிந்துகொள்ளவும் அதுபற்றி பெருமிதம் கொள்ளவும் முடியும்.” குருவின் இந்த போதனை எனக்கு முற்போக்காகத் தோன்றவில்லை, இயல்முரணாகத் தோன்றியது. எனவே அவ்விடத்தை விட்டு உடனடியாக விலக நினைத்தேன். என் தரப்பை எவ்வளவு நியாயப்படுத்த நான் முயன்றபோதும், குரு என்னை நம்ப மறுத்தார். ‘குருவுக்குக் கூட உண்மையை உணர்த்த முடியவில்லை என்றால் சொற்களால் என்ன பயன்?’ என எனக்குத் தோன்றியது.